நிலை தடுமாற்றம்..!
சரியெது பிழையெது சரியாகத் தெரியவில்லை அவை அறியாததால் புது சலனங்கள் நேற்று சரியாகப்பட்டது இன்று தவறாகப்படுகிறது நேற்று தவறாகப்பட்டது இன்று சரியாக தென்படுகிறது நாளை நிலைக்க போவது என்னவோ? இரவோடு தினமும் இரைச்சல்கள், எத்தனை எண்ணங்கள் நிதமும் வந்து மோதுகின்றன சிந்தை சிதறுகிறது தெளிவோ தெறித்து ஓடுகிறது ஆத்மாவோ விசனிக்கிறது, அது தெளிவான நிலையொன்றை தேடியலைகிறது சருகென உலருது நெஞ்சம் அதில் கருகிடும் துகள்களாய் தளும்புகள் கொஞ்சம், விந்தையாக இருக்கிறது வியப்போ மேலிடுகிறது, எந்தவித காரண்மின்றி என்னையே நொந்து கொள்கிறேன் எதற்கோ பயப்படுகிறேன் என்னவாயிருக்கும்? எதையாவது இழந்தேனா? இல்லை துயரத்தில் துவண்டு விழுந்தேனா? குறுகிய எல்லைக்குள் இருந்துவிட்டேனா? இல்லை பெருகிய ஆசைகளுக்கு இடமளித்தேனா? இச்சைகளுக்கு இசைந்தேனா? இல்லை எதையாவது துச்சமென மிதித்தேனா? குத்திடும் முட்களாய் குழப்பங்கள் அவை கிழித்து வரும் செங்குருதியாய் விசும்பல்கள்....!